திருவாரூர்: திருவாரூர் மூலங்குடி கிராமத்தில், ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஓ.என்.ஜி.சி குழாய் அமைத்து, கடந்த 50 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக விவசாய நிலங்களுக்கு அடியில் ஓ.என்.ஜி.சி குழாயானது பதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மூலங்குடி கிராமத்தில் பன்னீர்செல்வம் என்ற விவசாயிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விளைநிலத்தில் உளுந்து பயிர்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்விளைநிலத்தின் வழியேதான் ஓ.என்.ஜி.சி குழாய் செல்கிறது. தற்போது, குழாய் திடீரென உடைந்து, விளைநிலம் முழுவதும் கச்சா எண்ணெய் பரவியுள்ளது. இதனால், உளுந்து சாகுபடி முழுவதும் அழிந்த நிலையில் உள்ளது. மேலும் 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு இந்நிலத்தில் விவசாயம் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்தார்.