சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்களை கணக்கெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்களை கணக்கெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் தலைமையில் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐயப்பன் ஆபரணங்களின் வகை, தரம், எண்ணிக்கையை ஆய்வு செய்து அறிக்கை தர அந்த குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் மகரவிளக்கு பூஜையையொட்டி திருவாபரணம் அணிவித்து தீபாராதனை நடத்தப்படும். அப்போது பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு தெரியும். இந்த  திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக திருவாபரணம் பேடகங்களில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்க தனி அமைப்பை ஏற்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரமணா, பந்தளம் மன்னர் குடும்பம் தரப்பில் ஆஜரான  வக்கீலிடம், சபரிமலை  கோயிலுக்கு ஒப்படைக்கப்பட்ட திருவாபரணத்தை நீங்கள்  ஏன் சொந்தமாக  வைத்திருக்கிறீர்கள்.

அதை ஏன் அரசிடம் ஒப்படைக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் அரசு  விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்கள் குறித்த பட்டியல் உள்ளதா? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஐயப்பனுக்கு 16 ஆபரணங்கள் தான் உள்ளதா என்று அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அரச குடும்பத்திடம் ஆபரணங்கள் இருந்தாலும் அவை சபரிமலை ஐயப்பனுக்கு சொந்தமானவை தான் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சபரிமலை கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் நலன் குறித்து தனிச்சட்டம் இயற்றுவதில் என்ன சிக்கல்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் இயற்றுவது குறித்து பதில் தர 4 வாரம் கேரள அரசு அவகாசம் கோரியுள்ளது.

Related Stories: