முருகன் வேடத்தில் மயிலுக்கு பதில் கிளியை வைத்து கிண்டல் : நடிகர் யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: முருகன் வேடத்தில் மயிலுக்கு பதில் கிளியை வைத்து இழிவுபடுத்திய சிரிப்பு நடிகர் யோகிபாபு மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ேபாலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் முன்னணி அமைப்பின் நிறுவனர் நாராயணன் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:சினிமா துறையில் சமீபகாலமாக இந்து மத கடவுள்கள், இந்து மத உணர்வுகளை கொச்சைப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் யோகிபாபு நடிப்பில் வெளிவரவுள்ள ‘காக்டெய்ல்’ என்ற திரைப்படத்தில் தமிழ் கடவுளான முருகப்பெருமானை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அந்த படத்தின் முன்னோட்ட போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதில்  முருகன் வேடத்தில் யோகி பாபு, மயிலுக்கு பதில் கிளியை போட்டு கிண்டலாக அந்த போஸ்டர் அமைந்துள்ளது. இது முருகன் பக்தர்களையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. எனவே யோகி பாபு மீதும் அந்த திரைப்படத்தின்இயக்குனர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: