திருப்பதி: திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம், பீலேர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சீனாவில் வசித்து வந்தனர். அவர்கள் கடந்த மாதம் 18ம் தேதி சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக அவர்கள் அனைவரும், தங்களை பரிசோதித்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் 3 வயது குழந்தை, பெண் மற்றும் 2 ஆண்கள் என 4 பேர் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இதுகுறித்து மருத்துவமனை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, மருத்துவக் குழுவினர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும், அவர்கள் பரிசோதனை செய்ய வரவில்லை. அவர்களை தேடியபோது 4 பேரையும் காணவில்லை.