மும்பை: மத்திய பட்ஜெட்டில் மராட்டியத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டி உள்ளார். மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உள்ள மத்திய பட்ஜெட் யதார்த்தத்தில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு எந்திரமாக விளங்கும் மராட்டியத்துக்கும், மும்பைக்கும் அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. மராட்டியத்துக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் அடிப்படை வசதிகள் மற்றும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன.