சென்னை: சீனாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று சீனாவுக்கான இந்திய தூதரக அதிகாரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தலைமை அதிகாரி அக்யூனோ விமல், தமிழக அரசுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் கிருமி குறித்து 24ம் தேதி அன்று கடிதம் எழுதியிருந்தீர்கள். அங்குள்ள சுகாதார நிலை குறித்து இந்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. சீன அரசும் இந்த சூழ்நிலையை நன்றாக ஆராய்ந்து கவனித்து, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அடைத்து வைக்கப்பட்டுள்ள நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள் கிடைப்பதை சீன அரசு உறுதி செய்துள்ளது.