விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பேராசிரியை நிர்மலா தேவிக்கு 2வது முறையாக பிரிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் அழைத்து செல்ல முயற்சி செய்த பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் சாட்சி விசாரணைக்காக அவர்கள் மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி கடந்த 18ம் தேதி முருகன் மற்றும் கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால் வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, விசாரணைக்கு ஆஜராகவில்லை.