கார்த்தி சிதம்பரத்தின் மீதான வருமான வரி வழக்கு விசாரணை தடை நீடிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீதான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், பழைய மாமல்லபுரம் சாலையில்  முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு   விற்பனை செய்துள்ளனர்.    இதன் மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சத்தை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கு எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணையை மாற்றியதை எதிர்த்தும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து கடந்த 22ம் தேதி உத்தரவிட்டார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வக்கீல் கே.டி.எஸ்.துள்சி, மூத்த வக்கீல் அமித் தேசாய் ஆகியோர் வாதிட்டனர். இதையடுத்து, விசாரணையை பிப்ரவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை கார்த்தி சிதம்பரம், நிதி ஆகியோர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

Related Stories: