டெல்லி: மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில பாடப்பிரிவை படிக்கும் மாணவர்களால் சிபிஎஸ்இயிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடர்ந்து, மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிராக வேலூரை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா, இந்திரா பேனர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது சி.எம்.சி மருத்துவ கல்லூரியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவால், வேலூர் மருத்துவ கல்லூரி மிகவும் சிறப்பான கல்வி நிறுவனம். ஆகவே இந்த நீட் தேர்விலிருந்து விதிவிலக்கை நீங்கள் அளிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார். இதையடுத்து, விசாரணை தொடர்பாக நீதிபதி அருண் மிஸ்ரா சரமாரியான கேள்விகளை முன்வைத்தார். அச்சமயம் பேசிய நீதிபதிகள், நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.