இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அச்சிட்ட இயந்திரம் விற்பனை: பழைய இரும்பு பொருட்களுக்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

உத்திரகாண்ட்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அச்சடித்த இயந்திரம் கழிவு பொருளாக, விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்ட இயந்திரத்தின் பராமரிப்பு செலவு காரணமாக அவை விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகங்கள் டேரடூனில் இயங்கி வரும் சர்வே ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, கையால் எழுதப்பட்டிருந்த அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை கை மூலம் கோர்க்கப்பட்ட அச்சு கோர்வை மூலம் போட்டோ லித்தோகிராபிக் முறையில் இந்த பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருந்தன.

இந்த சட்ட புத்தகத்தை பிரேம் பெஹாரி ரைசாதா என்பவர் ஆங்கிலத்திலும், வசந்த் கிருஷ்ணா வைத்யா என்பவர் ஹிந்தியிலும் எழுதி இருந்தனர். தற்போது இந்த இயந்திரத்தை பராமரிக்கும் செலவு அதிகமாக இருப்பதாலும், தொழில்நுட்ப மாறுபாடு காரணமாகவும் இதனை பழைய இரும்பு பொருட்களுக்கு விற்று விட்டதாக சர்வே ஆஃப் இந்தியா அமைப்பின் லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வரலாற்று புகழ்மிக்க இயந்திரத்தை விற்பனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: