துருக்கி: துருக்கி நாட்டில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் அங்காராவில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏலாசிக் மாகாணத்தை மையமாக கொண்டு நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக நேரிட்ட நிலநடுக்கத்தாலும், அதை அடுத்து ஏற்பட்ட தொடர் அதிர்வுகளாலும் அப்பகுதியே பலமாக குலுங்கியது. இதில் ஏராளமான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்த இடிபாடுகளில் சிக்கி ஏலாசிக் மாகாணத்தில் 13 பேரும், மலாடியா மாகாணத்தில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.