டெல்டா மாவட்டங்களில் மழை; காற்றின் வேகம் அதிகம் உள்ளதால் குமரி, மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் அதிகம் உள்ளதால் குமரி, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள லேசான சுழற்சி காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்,தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென்றும் ,அதிகப்பட்ச வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியல் ஆக இருக்குமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் புதுவையில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும், திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மலைப்பாங்கான பகுதிகளில் அதிகாலை நேரங்களில் அதிக பனிமூட்டம் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. நகரில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 22 டிகிரி டெல்சியஸும் வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கடலடியில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், தூத்துக்குடி, மற்றும் கடம்பூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: