தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு: தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு பணிகளை கண்காணிக்க தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்து தமிழக அரசி அரசாணை வெளியிட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தஞ்சை குடமுழுக்கு விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவிற்காக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் 21 உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை கண்காணிப்பற்காக அமைக்கப்பட்ட இந்த குழுவில், மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர், தெற்கு ரயில்வே பொதுமேலாளர், நிதித்துறை, நகராட்சி நிர்வாகம், சுற்றுலாத்துறை செயலாளர்கள், தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு துறைகளின் கூடுதல் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, தீயணைப்புத்துறை டிஜிபி, தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெறுகின்றனர். இதற்கிடையே குடமுழுக்கை தமிழில் நடத்த உத்தரவிடக்கோரி ராமநாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சை பெரிய கோவில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 2020, பிப்ரவரி மாதத்தில் குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, இக்கோயிலில் ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: