சென்னை: வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வருமானத்தை அதிகளவில் மறைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி கார்த்திக் சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றதில் மனு தொடர்ந்திருந்தனர். 2015-2016 ஆண்டிற்கான வருமானத்தை மறைத்ததாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது வழக்கு தொடரப்பட்டது. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை அடுத்த முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை விற்ற வருமானத்தை மறைத்ததாக கார்த்தி சிதம்பரம் மீது புகார் எழுப்பப்பட்டது. ஒரு ஏக்கர் ரூபாய் 4 கோடி 25 லட்சம் என்ற விலையில் அக்னி எஸ்டேட் பவுன்டேசனுக்கு நிலத்தை கார்த்தி விற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விற்பனை ஒப்பந்தத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலையை ரூபாய் 3 கோடி என்று குறிப்பிட்டு உள்ளதாக கார்த்தி மீது வருமான வரித்துறை புகார் தெரிவித்தது.