சென்னை: தூக்கத்தில் மனைவி உயிர்பிரிந்த அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு கணவனும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் லோகநாராயணன் (65). இவர் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி (60). இவர்களது மகன், மகளுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். நேற்றுமுன்தினம் காலை காபி போடுவதற்காக ராஜேஸ்வரியை எழுப்பியபோது அவர் எழுந்திருக்காமல் அசைவற்று கிடந்ததால் அவர் இறந்துவிட்டது தெரிந்தது. இந்த அதிர்ச்சியில் லோகநாராயணனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.