சென்னை: மாமல்லபுரத்தில் நடந்த, மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாமல்லபுரத்தில் தினமும் உடற்பயிற்சி, தியானம் செய்தல், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட விழிப்புணர்வை வலியுறுத்தி மாமல்லபுரம் குங்பூ தற்காப்பு கலை மையம் மற்றும் தனியார் ஓட்டல்கள் இணைந்து 4 கி.மீ தூரத்திற்கான மாரத்தான் ஓட்டத்தை நேற்று நடத்தியது. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டல் வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை குங்பூ தற்காப்பு கலை பயிற்சி மைய தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் பஞ்சா, தனியார் ஓட்டல் இயக்குனர் டி.கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலையில், திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கோதண்டபாணி, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.