பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே தட்டு சுமந்து வந்து நடத்தும் வாழைப்பழம் சூறை விடும் வினோத விழா விமரிசையாக நடந்தது.திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள இக்கிராமத்தினர் விவசாயம் செழிக்கவும், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும் ஆண்டுதோறும் தை 3ம் தேதி வாழைப்பழங்களை சூறைவிடும் திருவிழா நடத்துகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று மாலை வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக தங்களது வீடுகளில் கூடைகளில் வாழைப்பழங்களை நிரப்பி பூஜை செய்தனர். தொடர்ந்து ஊர் எல்லை தெய்வமான ரெங்கம்மாள் கோயிலில் இருந்து, பெரிய பாத்திரங்களில் வாழைப்பழங்களை நிரப்பி தலையில் வைத்து ஆண்கள் மட்டுமே சுமந்து வந்தனர்.