புதுடெல்லி: வெளிநாடு செல்வதற்காக நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.20 கோடி பிணைத் தொகையை அவரிடம் திருப்பித் தரும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் மீதான மலேசியா மேக்சிஸ் நிறுவனம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்குகளை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு, 106 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அதற்கு முன்பாக, கார்த்தி சிதம்பரமும் கைது செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது, இருவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.