சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 159 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு மார்ச்சில் தொடங்குகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு (2019ம் ஆண்டுக்கானது) 896 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் 2ம் தேதி நடந்தது. தொடர்ந்து, ஜூலை 12ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் 11845 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 610 பேர் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடந்தது. இந்நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in ல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது:யுபிஎஸ்சி 2019ம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 159 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 105 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள். ஒட்டு மொத்தமாக சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் (சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம்) 360 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மார்ச் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெறும். மெயின் தேர்வு, நேர்முக தேர்வின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். யுபிஎஸ்சி நடத்தும் ஆளுமை மதிப்பீட்டுத் தேர்வு அல்லது நேர்முக தேர்வுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமி இலவச பயிற்சி அளிக்க இருக்கிருக்கிறது. இப்பயிற்சியானது வகுப்பறை பயிற்சி மற்றும் ஓய்வு பெற்ற, பணியில் இருக்கும் அதிகாரிகளை கொண்டு நடத்தப்படும். விருந்தினர் விரிவுரை, மாதிரி நேர்முக தேர்வு மற்றும் மாணவர்களுக்காக தனித்தனியே நடத்தப்படும். சுயவிவர பகுப்பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மாதிரி நேர்முக தேர்வுகளானது சென்னை, டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம், புனே மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் நடத்தப்படும். முன்பதிவிற்கு 63797 84702 தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அவர் கூறினார். நேர்முக தேர்வு முடிந்த பின்னர் நேர்முக தேர்வு, மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும். பயிற்சிக்கு பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.