அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் நடைபெறும் சேவல்கட்டு (சண்டை) பிரசித்தி பெற்றது. சேவல்களில் வல்லுறு, நூலான், கீரி, மயில் என்று பல்வேறு வகைகள் உண்டு. 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சேவல் கட்டு இப்பகுதி மக்களின் கலாசாரத்துடன் ஒன்றிய வீர விளையாட்டாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் அன்று ஆரம்பித்து 4 நாட்கள் சேவல் கட்டு நடைபெறும். அதன்படி நேற்றுமுன்தினம் முதல் சேவல் கட்டு நடந்து வருகிறது. இதில் கரூர் மட்டுமின்றி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சேவல் கட்டு பிரியர்கள் ஏராளமான சேவலுடன் வந்து கலந்து கொண்டனர்.