வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்: இன்று வரை 12 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்டுஏகாதசி விழா நிறைவு பெற்றது. இந்த விழாவில் 12 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு, ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த 6ம் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 12ம் தேதி திருக்கைத்தல சேவை நடைபெற்றது. 8ம் நாளான கடந்த 13ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது. 10ம் நாளான நேற்று(15ம் தேதி) நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு முழுவதும் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடத்தி காட்டப்பட்டது. பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார்.

அதன்பின் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர்.

அதன்பின் பல்வேறு வேதங்களை சொல்லியபடி நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர். பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசி மாலையும் அணிவிக்கப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். அத்துடன் வ கடந்த 21 நாள் நடந்த வைகுண்டு ஏகாதசி விழா நிறைவுபெற்றது. அதைத்தொடா்ந்து காலை 7.30 முதல் காலை 8.30 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். காலை 9 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். மதியம் 2 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி 2.45மணிக்கு கனு மண்டபம் சேர்கிறார். இரவு 8.15மணிக்கு கனு மண்டபத்திலிருந்து குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார்.

அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 10.30 மணி முதல் 11 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. அதன் பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். வைகுண்ட ஏகாதசி விழாவான 21 நாட்களில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பு விழா அன்று மட்டும் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Related Stories: