புதுடெல்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக மைக்கேல் தேவபிரதா பாத்ராவை நியமனம் செய்ய மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இவர் மூன்று ஆண்டுகள் இந்த பதவியை வகிப்பார். துணை கவர்னராக இருந்த விரால் ஆச்சார்யா கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி பதவியில் இருந்து விலகினார். பதவி காலம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருந்த நிலையில் ஆச்சார்யா ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக மைக்கேல் பணியாற்றினார். மும்பை ஐஐடியில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசின் நிதிக் கொள்கை துறையில் சேர்வதற்கு முன்பு பொருளாதார துறையின் கொள்கை ஆய்வாளராக பணியாற்றினார். ரிசர்வ் வங்கியில் பல்வேறு துறைகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். ஹார்வர்டு பல்கலையில் நிதி ஸ்திரத்தன்மை பிரிவில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார்.