லாரி விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு 1.81 கோடி இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லாரி விபத்தில் உயிரிழந்த கட்டுமான நிறுவன மேலாளரின் குடும்பத்தினருக்கு 1 கோடியே 81 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டர் வாகன விபத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் சவுந்தரராஜன். பிரபல கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த 2013ம் ஆண்டு காஷ்மிரில் அணைகட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, லாரி ஒன்று சாலை விதிமீறி கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்துள்ளது.

அந்த லாரி திடீரென சவுந்தரராஜன் மீது மோதியது. இதில்,  தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து, சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் சவுந்தரராஜனின் மனைவி புஷ்பலதா, மகன்கள் ராஜ் தீபக், ராஜ் திலீப் ஆகியோர் ₹1 கோடியே 20 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி உமாமகேஷ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில், மனுதாரரின் கணவர் மேலாளராக வேலை செய்து மாதம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 998 சம்பளம் வாங்கி வந்துள்ளார். பள்ளி சான்றிதழை வைத்து பார்க்கும்போது இறக்கும்போது அவரது வயது 50 என்று தெரியவந்துள்ளது. அவரது இறப்பு, குடும்பத்தினருக்கு பெரும் இழப்பாகும். விபத்துக்கு லாரியே காரணம் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சவுந்தரராஜனின் மனைவி மற்றும் மகன்களுக்கு லாரியின் இன்சூரன்ஸ் நிறுவனம் 1 கோடியே 81 லட்சத்து 94 ஆயிரத்து 800 இழப்பீடு வழங்க வேண்டும், என்று உத்தரவிட்டார்.

Related Stories: