திருப்பூர் அருகே சேட்டிலைட் போனில் பேசிய சிக்னல் கிடைத்துள்ளதால் தீவிரவாதிகள் தாக்கவுள்ளார்களா என அச்சம்: டி.ஆர்.டி.ஒ விசாரணை
திருப்பூர்: திருப்பூர் அருகே சேட்டிலைட் போன் சிக்னல் கிடைத்துள்ளதையடுத்து உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம், கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரில் 4 பயங்கரவாதிகள் திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் நாடு முழுவதும் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி இந்தியாவில் சேட்டிலைட் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி இரவு ராமநாதபுரம் உச்சிபுளியில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் சேட்டிலைட் போன் சிக்னல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து கடற்படை அதிகாரிகள் தெரிவித்த தகவலையடுத்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விசாரணையை தொடங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் சேட்டிலைட் போனை பயன்படுத்தியது யார்? பனியன் தொழிலாளர்கள் என்ற போர்வையில் திருப்பூரில் தீவிரவாதிகள் தங்கியுள்ளனரா? எந்த நாட்டில் உள்ளவர்களிடம் பேசப்படுகிறது? உள்ளிட்டவை குறித்து உளவுப்பிரிவு போலீசார் மற்றும் கியூ பிரிவு பிரான்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில், தமிழக கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். மேலும், தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.