சென்னை: தர்பார் படத்திலிருந்து சசிகலா பற்றிய வசனம் நீக்கப்படும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் தர்பார். இந்த படம் கடந்த 9ம் தேதி திரைக்கு வந்தது. இதில், ‘தென்னிந்தியாவில் சிறையிலிருந்து ஒருவர் வெளியே சென்று வருகிறார்’ என குறிப்பிட்டு வசனம் இடம்பெறும். இந்த வசனம், சசிகலாவை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக கருத்து பரவியது.
இந்நிலையில், இதுகுறித்து லைகா நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்களின் தர்பார் திரைப்படத்தில், கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரியவந்ததால் அது படத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.