சென்னை: இரண்டு அடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பதற்கு ஏதுவாக உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, வாகன இணைப்பு சேவை, ஷேர் ஆட்டோ, கேப் வசதி உள்ளிட்ட சேவைகளை அளித்து வருகிறது. நாள்தோறும் 1 லட்சம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர் உள்ளிட்ட 23 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில வாகன நிறுத்தங்களில் இடவசதி மிகவும் குறைவாக உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு சிரமமாக உள்ளது. எனவே, அந்த நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட இருசக்கர வாகன நிறுத்தங்களை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.