தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு எலும்பு முறிவு, இதயம், கல்லீரல், நரம்பியல், பிளாஸ்டிக் சர்ஜரி, பல் மருத்துவம், குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு புற நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளியாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், அறுவை சிகிச்சை பெறுபவர்களை தங்க வைக்க 8 மாடி கட்டிடம் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை திடீரென 3வது மாடியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக ஓடியது.