சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ள நிலையில் தற்போது இன்னும் சில நாட்களில் வட கிழக்கு பருவ மழை முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த பருவ காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கும், மக்களை பயமுறுத்தும் அளவுக்கும் புயல் ஏதும் வங்கக் கடலில் உருவாகவில்லை. வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக ஏற்பட்ட மழை காரணமாக போதிய அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதனால் ஏற்பட்ட வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. அதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நேற்று மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பள்ளிப்பட்டு, தொழுதூர், பூந்தமல்லி, அரியலூர், கடலூர், உளுந்தூர்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், சென்னை டிஜிபி அலுவலகம், புதுக்கோட்டை, முஷ்ணம், திருத்தூர் ஆகிய இடங்களில் 10 மிமீ மழை பெய்துள்ளது.