சென்னை: வருமான வரித்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, ஜனவரி 21ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு சொந்தமாக முட்டுக்காடு அருகே நிலம் ஒன்று இருந்தது. அந்த நிலத்தை கடந்த 2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேசன் நிறுவனத்திற்கு 4.25 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால் இந்த நிலத்தின் சந்தை மதிப்பை குறைத்து விற்பனை செய்து, அதன் மூலம் கார்த்தி 6.38 கோடியும், ஸ்ரீநிதி 1.35 கோடியும் ரொக்கமாக வாங்கியதாகவும். அந்த பணத்தை 2014-15ம் ஆண்டு வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில் 2015ம் ஆண்டு வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் அட்வாண்டேஜ் ஸ்டேடர்ஜிக் கன்சல்டிங் என்ற நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பண பரிமாற்றம் தொடர்பாகவும், ரொக்கமாக வாங்கியது தொடர்பாகவும் சில ஆவணங்கள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வருமானவரித்துறை, வருமான வரி கணக்கில் முறைகேடு தொடர்பாக சென்னை எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது கார்த்தி சிதம்பரம் எம்.பி யாக தேர்வானதால், வழக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது.