ஈரான் ராணுவ தளபதி ஜெனரல் சுலைமானின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு ; 50 பேர் படுகாயம்

டெஹ்ரான் : அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி ஜெனரல் காஸ்சிம் சுலைமானின் உடல் அவர் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று சுலைமானின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் கருப்பு உடை அணிந்தவாறு அமெரிக்காவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவாறு பேரணிச் சென்றனர்.பொதுமக்களின் அஞ்சலியை அடுத்து காஸ்சிம் சுலைமானின் உடல் அவர் சொந்த ஊரான கெர்மனுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இறுதிச் சடங்குகளுக்கு பிறகு சுலைமானின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பொது மக்கள் என லட்சக்கணக்கானோர் திரண்டு சுலைமானிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி ஜெனரல் காஸ்சிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாகும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில்  ஈரான் ராணுவ தளபதி ஜெனரல் காஸ்சிம் சுலைமானின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்க 35 பேர் உயிரிழந்து உள்ளனர். இறுதி ஊர்வலகத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கெர்மன் நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 48 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: