சென்னை: உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மிகப்பெரிய சரிவை காட்டுவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்யவாணி முத்துநகர் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மக்களை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடிசைகள் உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகாரிகள் நடக்கிறார்கள். இதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுட முடிவு செய்தோம். இந்தநிலையில், அதிகாரிகள் இந்த பிரச்னையில் கவனம் செலுத்துவதாக கூறியதையடுத்து தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். ஆனால், தொடர்ந்து குடிசைகளை அகற்ற டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.