சென்னை: மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவாயில் முன்பு வைக்கப்பட்டு இருந்த, புத்தர் சிலையை அதன் உரிமையாளர்கள் திடீரென தூக்கி சென்றனர். பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் மாமல்லபுரம் வந்தனர். அங்கு சந்தித்து பேசிய அவர்கள், புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டைகல், அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகியவற்றை சுற்றி பார்த்தனர். அப்போது, பல்லவர் கால சிற்பங்கள் முன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
சீன அதிபரை ஈர்பதற்காக சீனர்கள் புத்த மதத்தை தழுவியவர்கள் என்பதால், கடற்கரை கோயில் நுழைவாயில் முன் 2 யானைகளுக்கு நடுவே புத்தர் சிலையை வைத்தனர். இரு நாட்டு தலைவர்கள் வந்து சென்ற பிறகு ஐந்து ரதங்கள் பகுதியில் இருந்து சிலைகளை அகற்றனர். ஆனால், புத்தர் சிலை மட்டும் அகற்றப்படாமல் அப்படியே இருந்து வந்தது. இதைதொடர்ந்து, தினமும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இங்குள்ள புத்தர் சிலை முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொள்வதை வழக்கமாக கொண்டனர்.