ஆம்பூர் அரசு மருத்துவமனையின் அவலம் நாய்க்கடி சிகிச்சைக்கு வந்த மாணவனை ஊசி வாங்கி வரச்சொல்லி அலைக்கழிப்பு: சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ

ஆம்பூர்: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்த மாணவனை ஊசி வாங்கிவரச் சொல்லி அலைக்கழித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வளையல்கார தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ராகுல்(11), 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் சுமார் 2 மணியளவில் ராகுல் தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த வெறிநாய் ஒன்று ராகுலை விரட்டி கை, விரல்கள் மற்றும் முகத்தில் கடித்தது.

இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ராகுலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனையில் இருந்த நர்ஸ் ராகுலிடம், ‘ஊசி வாங்கி வா’ என கூறினார். இதையடுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே இருந்த கடைக்குச் சென்று ஊசி வாங்கி தந்தனர். அதன்பிறகே நாய்க்கடிக்கு ஊசி போட்டனர். இதையடுத்து, நாய் கடித்ததால் முகத்தில் தொங்கிய சதையை தைக்க ஊசி வேண்டும் என மீண்டும் கேட்டுள்ளனர். பின்னர் அதனையும் வெளியே சென்று கொக்கி ஊசி வாங்கிவந்து கொடுத்தனர். இதற்கு பின்னரே மாணவனுக்கு தையல் போட்டனராம். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: