சென்னை: அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி வருகிற ஜூன் மாதம் சீனா செல்கிறார். சீனாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள கலாச்சாரம், வர்த்தகம் போன்றவற்றை வலுப்படுத்தவும் அங்குள்ள முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார். தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் நுட்பங்களையும் பார்வையிட்டு அதை தமிழ்நாட்டில் செயல்படுத்த கூடிய சாத்தியக்கூறுகள் பற்றியும் கேட்டறிந்தார். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 10ம் தேதி சென்னை திரும்பினார். இதைத்தொடர்ந்து வெளிநாட்டில் உள்ள சில தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினார்கள். இப்போது இருநாட்டு கலாச்சார உறவுகள், வர்த்தகம், குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பேட்டி அளித்த சீன அதிபர் ஜின்பிங், தமிழ்நாட்டின் கலாச்சாரம் அன்பான உபசரிப்பால் நெகிழ்ந்ததாக வெகுவாக பாராட்டினார்.