லக்னோ: `பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச் சென்றதால் விதிக்கப்பட்ட அபராதத்தை நானே செலுத்துவேன்’ என ஸ்கூட்டரின் உரிமையாளர் அறிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தாராபுரி கைது செய்யப்பட்டார். லக்னோவில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 28ம் தேதி வந்தார். அவருக்கு அங்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். அவரது வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு காங்கிரஸ் தொண்டர் தீரஜ் குர்ஜார் என்பவருடன் ஸ்கூட்டரில் ஏறி பிரியங்கா தப்பிச் சென்றார். அப்போது பிரியங்காவும், ஸ்கூட்டரை ஓட்டிய தீரஜும் ஹெல்மெட் அணியவில்லை. இதையடுத்து, கடந்த 29ம் தேதி ஸ்கூட்டரின் உரிமையாளர் ராஜ்தீப் சிங்குக்கு ₹6,300 அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது.