புதுடெல்லி: நடப்பாண்டில் மட்டும் இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் 3200 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக இந்திய ராணுவத்தை திசை திருப்ப பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவது வழக்கம். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதையொட்டி, 778 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இருநாட்டு எல்லை பகுதியில் பல முறை தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன.
குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு இதுவரை 3200 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் காரணமாக இருநாட்டுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் பலர் உயிரிழிந்துள்ளனர். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மட்டும் 1500க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, பூஞ்ச், அக்நூர், டாங்தர் உள்ளிட்ட பல இந்திய எல்லை பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த அத்துமீறல்கள் இந்த ஆண்டு அதிகரித்துள்ள நிலையிலும், இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.