சென்னை: கண் சிகிச்சைகளுக்கு உதவுவதாக கூறி பிரபல கண் மருத்துவமனையின் பெயரைச் சொல்லி செல்போன் மூலம் ஒரு கும்பல் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. வங்கி கணக்கு எண்ணை சொல்லுங்கள், கிரெடிட் கார்டு எண்ணை சொல்லுங்கள் என செல்போனில் தினசரி பல மோசடி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இதில் பலர் பாதிக்கப்பட்டு தற்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், பிரபல தன்னார்வு தொண்டு நிறுவனம் மற்றும் பிரபல கண் மருத்துவமனையின் பெயரால் செல்போனில் பண மோசடி அழைப்பு வருவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை பம்மலில் சங்கரா கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையுடன் இணைந்து சைட் சேவர்ஸ் என்ற தன்னார்வு தொண்டு நிறுவனமும் பல்வேறு சேவைகளில் பங்கெடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களின் பெயரைச் சொல்லி செல்போனில் ஒரு பெண் அழைத்து நன்கொடை வசூலிப்பதாக கூறி வருகிறார். ஆண்டுக்கு 675 ரூபாய் வசூலிப்பதாகவும் அதை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கல்விக்காக செலவழிப்பதாகவும் அந்த பெண் கூறுகிறார். வாடிக்கையாளரின் வீட்டிற்க்கே இரண்டு நபர்களை அனுப்பி பணத்தையும் ஆவணங்களையும் சேகரித்துக்கொள்வதாகவும் அந்த பெண் கூறுகிறார்.