சென்னை: சுனாமி தாக்கத்தின் 15ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பட்டினப்பாக்கம், காசிமேடு ஆகிய கடற்பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு மீனவர்கள், அரசியல் கட்சியினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் 2004 டிசம்பர் 26ம் தேதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது சுனாமி பேரழிவு. தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் உடமைகளை பறிகொடுத்தனர். இந்த நிகழ்வு நடந்து முடிந்து 14 வருடங்கள் நிறைவடைந்து, 15ம் ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி தங்கள் உறவுகளை இழந்த பலரும் நேற்று அந்தந்த கடற்கரை பகுதிக்கு சென்று உறவுகளை நினைத்து மலர் தூவி, பால் ஊற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனால், நேற்று கடற்கரை பகுதிகள் சோகமயமாக காட்சியளித்தன. மேலும், சுனாமி நிகழ்ந்த தினத்தை துக்க நாளாக அறிவித்து மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவான்மியூர், திருவொற்றியூர், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ெசலுத்தினர்.