அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதி சாலைகளில் பொதுமக்கள் தங்களது குப்பைகளை கொட்டுவதற்கு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகள், வணிக வளாகங்கள், மண்டபங்கள் உள்பட பல்வேறு இடங்களில் சேரும் குப்பைை கொட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் அதிகாலை மற்றும் இரவு என 2 முறை மாநகராட்சி லாரிகள் மூலம் தொட்டிகளில் உள்ள குப்பை அகற்றப்பட்டு, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. லாரிகள் செல்ல முடியாத தெருக்களில் துப்புரவு பணியாளர்கள் ரிக்சா வண்டிகள் மூலம் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கின்றனர். குப்பையை மறு சுழற்சி செய்வதற்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும், என மாநகராட்சி பொதுமக்களிடம் வலியுறுத்தி உள்ளது. ஒரு சிலர் இதை கடைபிடித்தாலும் பலர் தங்கள் வீடுகளில் சேரும் குப்பையை பிளாஸ்டிக் பைகளில் போட்டு வெளியே செல்லும்போது சாலையோரம் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், பல இடங்களில் சாலையோரம் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. எனவே பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி 8வது மண்டலம், 105வது வார்டு துப்புரவு ஆய்வாளர் சந்தியா புது முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன்படி, அரும்பாக்கத்தில் அதிகளவு குப்பை கொட்டப்படும் பகுதிகளை தேர்வு செய்து, அந்த பகுதியில் ‘‘குப்பையை சாலையில் வீசாதே’’ என அரிசி மாவில் கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம்.