திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கடந்த 10ம் தேதி 2,668 அடி உயர மலைமீது ஏற்றப்பட்ட மகாதீபம், 11 நாட்களுக்கு பிறகு நாளை இரவுடன் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து, ஆருத்ரா தரிசனத்துக்குப்பின் தீபச்சுடர் பிரசாதம் (தீப மை) பக்தர்களுக்கு வழங்கப்படும். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற விழா, கடந்த 10ம் தேதி மகா தீப பெருவிழாவுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. இறைவன் திருவடிவான அண்ணாமலை மீது ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், திரி ஆகியவை மலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, தினமும் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டு
வருகிறது. மகாதீபத்தன்று நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள், மகாதீபம் ஏற்றப்படும் 11 நாட்களில் திருவண்ணாமலைக்கு வந்து தீபத்தை தரிசிப்பது வழக்கம்.