சென்னை: வரி ஏய்ப்பு புகாரின் பேரில் வணிகவரித்துறை புலனாய்வு குழு கடந்த 3 மாதத்தில் தமிழகம் முழுவதும் 145 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது மட்டுமின்றி, அவர்களிடம் 60 கோடி வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் வணிகவரித்துறை 60 முதல் 70 சதவீதம் தனது பங்களிப்பை அளிக்கிறது. வணிகவரிதுறையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் பதிவு செய்து உள்ளனர்.
இதில், உற்பத்தி பிரிவை சேர்ந்த வணிகர்கள் வரி செலுத்துவதற்கான வரம்பு 5 லட்சம், மாநிலத்துக்குள்ளேயே பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் வணிகர்களுக்கான வரி வரம்பு 10 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள், ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்குள் வரவு, செலவு மற்றும் பொருட்கள் இருப்பு குறித்த கணக்கு விபரங்களை அந்தெந்த மண்டல வணிகவரி அலுவலகத்தில் வணிகர்கள் சமர்ப்பித்து, உரிய வரியை செலுத்த வேண்டும். அவ்வாறு உரிய நேரத்தில் கணக்குகள் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும். இதில், வணிகர்கள் பலர் உரிய நேரத்தில் கணக்கு தாக்கல் செய்து முறையாக வரி செலுத்தி வருகின்றனர்.