புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் வீடு வீடாக ஓட்டு கேட்டு செல்லும் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். உங்களுக்கே வாக்களிப்பேன் என வெற்றிலை மீது சத்தியம் செய்து தருபவர்களுக்கு மட்டும் பணம் கொடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, கறம்பக்குடி, குன்றண்டார்கோவில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் இரண்டாம் கட்டமாக அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, திருமயம், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.13 ஊராட்சி ஒன்றியங்களில் 497 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் பல இடங்களில் சித்தப்பா, பெரியப்பாக்கள், அவர்களின் மகன்கள், அத்தை, மாமன்கள் மற்றும் அவர்களின் மகன்கள் என உறவு முறையினர் நேரடியாக எதிர்த்து போட்டியிடுகின்றனர். இதனால் இவர்களின் உறவினர்கள் நேரடியாக யாரை ஆதாரிப்பது என்று குழம்பியுள்ளனர். சிலர் வெளிப்படையாக ஒருவரை ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். ஒரு சிலர் இருவரில் ஒருவரை போட்டியிட செய்ய சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.