அண்ணாநகர்: வில்லிவாக்கம், பாடி மேம்பாலம் அருகே சுமார் 39 ஏக்கர் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் கரைப்பகுதி மற்றும் நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இந்த குளத்தில் நீர் சேமிக்க முடியாமல் வறண்டு காணப்படுகிறது. இதை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில், சென்னை குடிநீர் வாரிய கட்டுப்பாட்டில் இருந்த இந்த குளத்தை மாநகராட்சி மழைநீர் வடிகால் துறை பெற்று, தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குளக்கரையை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களை அங்கிருந்து காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். இவர்களுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்று இடத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.