தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னை : கேரளா மற்றும் தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி, சேலம், நாமக்கல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரிலும், நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலும் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனிடையே அக் 1 முதல் தற்போது வரை தமிழகத்தில் 43 செ.மீ மழை பெய்திருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர்  புவியரசன், நாளையும் மழை நீடித்தால் சராசரி மழையளவான 44 செ.மீ மழை கிடைத்துவிடும் என்றார். மேலும் 20ம் தேதிக்கு மேல் மழையை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்தார்.

Related Stories: