அண்ணாநகர்: அமைந்தகரையில் தனியாருக்கு தாசில்தார் தாரைவார்த்த 20 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 30 சென்ட் காலி இடம் உள்ளது. இந்த இடத்தை அமைந்தகரையை சேர்ந்த ஒருவர் கடந்த ஜூன் மாதம் தனது பெயரில் பட்டா மாற்றம் செய்ததாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் விசாரணையில், மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை, தனியார் ஒருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு தாசில்தார் பட்டா பெயர் மாற்றம் செய்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி அதிகாரிகள் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷிடம் தெரிவித்தனர். அவர், மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தார்.