பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி டெட் தகுதி தேர்வை எழுதி கணித ஆசிரியராகலாம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி டெட் எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பள்ளிப்படிப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம், பொறியியல் துறைகளையே தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக பொறியியல் துறையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பட்டப்படிப்பை முடித்த அனேக பொறியாளர்கள் வேறு துறைகளில் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் பி.இ படிப்பில் எந்த பிரிவை எடுத்தாலும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம்  என்று கூறப்பட்டுள்ளது. சமநிலை அந்தஸ்து வழங்கப்படாததால் பி.இ படித்தவர்கள் டெட் தகுதி தேர்வு எழுத இயலாத நிலை இருந்த சூழ்நிலையில் தற்போது புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அரசாணையின்படி பி.இ.படித்தவரும் இனி டெட் தேர்வு எழுதி 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கணித ஆசிரியராக பணியாற்றலாம். 2015-2016 கல்வி ஆண்டில் பி.இ. படித்தவர்களும் பி.எட் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று ஒரு அறிவிப்பினை தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டது. ஆனால் அந்த வகையில் சேரக்கூடிய மாணவர்கள் டெட் தேர்வு எழுத தகுதி அல்ல என்று கூறப்பட்டது. ஏனெனில் கலை, அறிவியல் படிப்பை படித்தவர்கள் தான் பி.எட் படிக்கலாம் என்பதற்கான அரசாணை உள்ளது. தொடர்ந்து சமநிலை அந்தஸ்து வழங்கப்படாததால் பி.இ படித்தவர்கள் டெட் தகுதி தேர்வு எழுத இயலாத நிலை இருந்தது. இதற்கு முன்பு பி.எட் கல்லூரிகளில் 20 சதவிகித இடங்கள் பொறியியல் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் அதிகம் சேராததால் அது 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

அதற்கு முக்கிய காரணம் பி.எட் படிப்பை படித்தாலும் அதற்கு பிறகு டெட் தேர்வை எழுதி அவர்கள் அரசு பள்ளியில் ஆசிரியராக முடியாத சூழல் இருந்தது. அதற்கு தீர்வாக தற்போது ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் 6 வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம். அதற்கு அவர்கள் தகுதி பெறுகின்றார்கள் என்ற அரசாணையை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான கூட்டம் நவம்பர் மாதம் 6ம் தேதியிலிருந்து 12ம் தேதி வரை நடைபெற்றது. சமநிலை அந்தஸ்தை வழங்குவதற்காக வைக்கப்பட்ட குழு முடிவெடுத்ததன் அடிப்படியில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: