சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிமிடத்துக்கு 1 கட்டணத்தில் இ-பைக் சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வாகன சேவை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் சீருந்து இணைப்பு சேவை, ஷேர் ஆட்டோ, டாக்சி சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முற்றிலும் மின்சாரத்திலேயே இயங்கும் வகையினாலான இ-பைக் சேவையை கிண்டி, ஆலந்தூர், வடபழனி மற்றும் அண்ணாநகர் ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. வோகோ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இதில் 1 கி.மீ தூரத்துக்கு ₹4 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ‘fly’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிமிடத்துக்கு ₹1 கட்டணத்தில் இ-பைக் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.