சென்னை : அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு மற்றும் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் இணைந்து சென்னை பெரம்பூரில் மூன்று நாள் மாநாடு நடத்துகிறது. இதில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ரயில்வே தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். நேற்று நடந்த மாநாட்டில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். நாளை பெண்கள் அணியும், தொடர்ந்து கருத்தரங்கமும் நடக்கிறது.
இதுதொடர்பாக, சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா செய்தியாளர்களிடையே கூறியதாவது: ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சென்னை பெரம்பூரில் இயங்க கூடிய ரயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலியில் இயங்கி வரும் ரயில் பெட்டி தொழிற்சாலை ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவில் 90% பணிகளை முடித்து விட்டது. இந்த இரண்டு தொழிற்சாலைகளும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் நிலையில் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் செலவு தற்போதைய செலவை விட பல மடங்கு அதிகமாகும்.