புரி: வீட்டுக்கு காரில் அழைத்து செல்வதாக கூறி, போலீஸ் குடியிருப்புக்கு அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு உட்பட 4 பேர் கும்பலை ஒடிசா போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் கடந்த வாரம் கால்நடை பெண் மருத்துவரை, 4 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் புரியில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர், மெல்லிசை விருந்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பியுள்ளார். நிமாபரா பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் போது, அவ்வழியாக காரில் வந்த 4 பேர் கும்பல், அந்த சிறுமியிடம் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி காரில் ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் போலீஸ் குடியிருப்புக்கு சென்றனர். அங்கு, சிறுமியை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சில மணி நேரம் கழித்து அந்த சிறுமியை, அவரது வீட்டுப் பகுதியில் இறக்கிவிட்டு சென்றனர்.