லக்னோ: உபி.யில் பள்ளியில் வழங்கிய உணவில் எலி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகின்றது. 1.5 லட்சம் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகின்றது. இதன் மூலம், ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக மதிய உணவு குறித்த பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களை உத்தரப்பிரதேச அரசு சந்தித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் தரையில் அமர்ந்து, சப்பாத்திக்கு உப்பை தொட்டு சாப்பிட்ட வீடியோ வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் சோன்பத்ரா மாவட்டத்தில் மதிய உணவு தயாரிக்கும் சமையலறையில் ஒரு லிட்டர் பாலை ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து 81 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.